கிணற்றில் விழுந்த யானை 12 மணி நேரத்துக்கு பின் மீட்பு

தட்சிண கன்னடா: மங்களூரில் உணவு தேடி வந்து 30 அடி பாழடைந்த கிணற்றில் விழுந்த 25 வயதுள்ள யானையை, 12 மணி நேர போராட்டத்துக்கு பின், வனத்துறையினர் பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரின் பெராஜாவில் கடந்த சில நாட்களாக 20 முதல் 30 யானைகள் முகாமிட்டிருந்தன. பெராஜாவில் ரமேஷ் நாயக்கிற்கு சொந்தமான எஸ்டேட்டில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், யானையின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. ஆனால் யானையை காணவில்லை.

எஸ்டேட்டில் உள்ள தண்ணீர் வற்றிய கிணற்றில் இருந்து சத்தம் வந்ததை உறுதி செய்தனர். அங்கு சென்று பார்த்தபோது, யானையை பார்த்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அடர்ந்த வனப்பகுதிக்கு, வனத்துறையினர் வந்தனர். இரவு நேரம் என்பதால் யானையை மீட்கும் பணி சாத்தியமில்லை. எனவே, யானையை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 6:30 மணியளவில் பொக்லைன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. யானை நடந்து மேலே வரும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. பாதை அமைத்ததும், யானை மேலே ஏறி, மக்கள் இருக்கும் திசைக்கு திரும்பியது. இதை பார்த்த வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்து, வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொடர்ந்து 12 மணி நேர முயற்சிக்கு பின், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

Advertisement