முன்மாதிரி தொகுதியாக மாற்றப்படும் :திமுக., மாவட்ட பொறுப்பாளர் பிரசாரம்

வானுார்: 'முன்மாதிரியான பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என கண்டமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் பேசினார்.

வானுார் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கவுதம் திராவிட மணியை ஆதரித்து கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், ராம்பாக்கம், சொரப்பூர் பகுதிகளில் பேசுகையில், 'இந்த தொகுதி 25 ஆண்டு காலமாக எதிர்க்கட்சியின் வசமே உள்ளது. தி.மு.க., எம்.எல்.ஏ., இல்லாமலேயே கண்டமங்கலத்தில் தீயணைப்பு நிலையம், 4 கோடி ரூபாயில் விவசாய அலுவலகம், 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 வகுப்பறை கட்டடங்கள் என பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க., வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால், இந்த பகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிவா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, சேர்மன் வாசன், வட்டார காங்., தலைவர் அய்யப்பன், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பிரகாஷ், இந்திய கம்யூ., குப்புசாமி, வி.சி., ஒன்றிய பொருளாளர் பாபு உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement