இரு சமுதாய மக்களை மோத செய்வது தான் ஸ்டாலின் வேலை சிதம்பரத்தில் அன்புமணி குற்றச்சாட்டு

சிதம்பரம்: ஓட்டுக்காக இரு சமுதாய மக்களை மோத செய்வதுதான் ஸ்டாலின் வேலை என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.

சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்தபோது பேசியது:

தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என கேட்கவில்லை, காப்பாற்ற வேண்டும் என கேட்கிறேன். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அடுத்து பழனிசாமி ஆட்சியிலும் பெண்கள் தைரியமாக இருந்தனர். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த, தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார். இது போன்று தினம் ஒரு சம்பவம் நடந்து வருகிறது. எனவே, மக்கள் விரோத தி.மு.க., அரசை அகற்ற வேண்டும்.

ஓட்டு வேண்டுமென்றால், வன்னியர்களையும், பட்டியலின மக்களையும் அடித்துக் கொள்ள வைப்பது தான் ஸ்டாலின் வேலை. இனி இதுபோன்ற சூழ்ச்சி எடுபடாது. எங்களுக்கு வேலை வேண்டும், படிப்பு வேண்டும், பிள்ளைகளுக்கு சுயமரியாதை வேண்டும் என்ற நிலைக்கு இரு சமுதாய மக்களும் மாறிவிட்டனர்.

தி.மு.க,வின் அயலக செயலாளர் ஒருவர், 3000 கோடி போதை மாத்திரைகளை தமிழகத்தில் உள்ளே கொண்டு வந்து தமிழக இளைஞர்களை சீரழித்துள்ளார்.

தி.மு.க., காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் தமிழகத்தில் ஒரு மாற்றம் வர வேண்டும். எனவே, ஜாதி மதம் கட்சி பார்க்காமல் தி.மு.க., ஆட்சியை துாக்கி எறியுங்கள்.

இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement