தபால் ஓட்டை பிரித்து பார்த்து தி.மு.க.,வினரிடம் கூறிய அலுவலர்

23

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், ஒடுவன்பட்டி ஊராட்சி சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார், 42; மாற்றுத்திறனாளி. ஏப்., 13ல் இவர், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்தார்.

ஓட்டுப்பதிவு அலுவலர், ஓட்டு சீட்டை பெட்டியில் போடுவதற்கு முன்பாக, அதை பிரித்து, முத்துக்குமார் யாருக்கு ஓட்டளித்தார் என்பதை பார்த்துள்ளார். அதை, தி.மு.க.,வினரிடம், அலுவலர் கூறியதாக முத்துக்குமார் வேதனையில் உள்ளார்.

இதுகுறித்து முத்துக்குமார் கூறியதாவது: ஓட்டு சீட்டில் எனக்கு பிடித்த சின்னத்தில் ஓட்டளித்து, அதை மடித்து அலுவலரிடம் கொடுத்தேன். அவர், 'சீட்டை பிரித்து, நான் யாருக்கு ஓட்டளித்தேன்' என பார்த்தார்.

பின், என்னை பார்த்து சிரித்தார். எனக்கு, அப்போதே நெருடலாக இருந்தது. நேற்று, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர், ஏன் எங்களுக்கு ஓட்டு போடவில்லை என கேட்டு என்னை மிரட்டினர்.

'நான் யாருக்கு ஓட்டளித்தேன்' என்பது எனக்கும் ஓட்டுப்பதிவு அலுவலருக்கும் மட்டுமே தெரியும். அவர்தான், என் ஓட்டு ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement