இன்று மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய்கிறது; தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவு

9

நமது நிருபர்




தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம இன்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் அதற்குமேல் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது. வாக்காளர்கள் அல்லாதோர் தொகுதியில் இருக்கக்கூடாது என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி காலை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனையொட்டி இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் பல்வேறு கிடுக்கிப்பிடி உத்தரவுகளை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* தேர்தல் தொடர்பாக எந்த வித பொதுக்கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ, வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட எந்த சாதனம் மூலம் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.



* பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு, பிற கேளிக்கை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த கூடாது. அதன் மூலம் பொதுமக்களிடம் தேர்தல் விவகாரத்தையும், பிரசாரம் செய்யக் கூடாது. விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.


* தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் இன்று மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.


* கல்யாணமண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா? என்பதை கண்டறியப்படும்.


* வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட வாகன அனுமதிகள், இன்று மாலை 6 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது.


* இது தண்டிக்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும். 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைக்கப்படலாம். தேவையில்லாத கூட்டத்தை அவர்கள் அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement