சூரமங்கலம் ஜெயதுர்கா பள்ளி ஆண்டு விழா

நெட்டப்பாக்கம்: சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில் 18ம் ஆண்டு விழா மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி தாளாளர் மணி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் விஜயாமணி வரவேற்றார். முதன்மை விருந்தினர்களாக இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆட்சேர்பு அலுவலர் செந்தில், திருவண்டார்கோவில் நவதுர்கா மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் விவேக், ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் தினேஷ் ஆகியோர் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி தனியார் பள்ளி சுயநிதி கல்வி குழுமத்தின் தலைவர் ஜானகிராமன், செயலாளர் சந்தானம், பொருளாளர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு 2024-25ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.

நடப்பு கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் மற்றும் 100 சதவீதம் வருகை பதிவேடு பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மணி, பள்ளி முதல்வர் விஜயாமணி ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

தொடர்ந்து எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர்களுக்கு பள்ளி ஒருங்கிணைப்பாளர் கவிஸ்ரீ பட்டங்களை வழங்கி, பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement