தி.மு.க., வேட்பாளர் கணேசன் ஓட்டு சேகரிப்பு

திட்டக்குடி:திட்டக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் கணேசன், நகராட்சி வார்டுகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். அவருக்கு மலர் துாவி, மாலை அணிவித்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, அங்கு கணேசன் பேசியதாவது:

தொகுதிக்குட்பட்ட நகராட்சி வார்டுகளில் சிமெண்ட் சாலை, குடிநீர், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம், திட்டக்குடியை மையப்படுத்தி பல கிராமங்களுக்கு அரசு பஸ் வசதி, பாதாள சாக்கடை திட்டம் உட்பட பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.

மக்களுக்கு அயராது பாடுபட்டு அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி உள்ளேன். நம் முதல்வர் ஸ்டாலின் பெண்கள், முதியோர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் முன்னேற பல்வேறு சிறந்த திட்டங்களை அறிவித்து, நிறைவேற்றி வருகிறார். மண்ணின் மைந்தனாகிய எனக்கு ஓட்டு போடுங்கள். நாம் மீண்டும் வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

அப்போது, தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், நகர செயலாளர் பரமகுரு, ஒன்றிய செயலாளர் அமிர்தலிங்கம், வி.சி., மாவட்ட செயலர் பாலமுருகன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் உமாநாத் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement