அந்திலி நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்பாளர் பழனிசாமி ஓட்டு சேகரிப்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பழனிசாமி நேற்று திருவெண்ணைநல்லுார் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார், ஏனாதிமங்கலம், எரலுார், வளையாம்பட்டு, மழையம்பட்டு, தடுத்தாட்கொண்டூர், திருவெண்ணைநல்லுார் பேரூராட்சிகளில் ஓட்டு சேகரித்தார்.

முன்னதாக அரகண்டநல்லுார் நரிக்குறவர் குடியிருப்பில் ஓட்டு சேகரிக்க சென்ற பழனிசாமிக்கு நரிக்குறவர் சமூகத்தினர் பாசிமணி மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது, பழனிசாமி பேசுகையில்; அ.தி.மு.க.,வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்., வழி நடத்திய ஜெயலலிதா, நம்மையெல்லாம் ஒருங்கிணைத்து, நல்லாட்சி தந்த பழனிசாமி ஆகியோர் பின்தங்கிய சமூகத்தை, சமுதாயத்தின் உயர்ந்த நிலைக்கு மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நரிக்குறவர் சமுதாயத்திற்கு பல்வேறு சலுகைகள், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி தங்களின் வாழ்வு மேம்பட பாடுபட்டுள்ளனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். இதன் பயனாக மத்திய பா.ஜ., அரசு சட்ட திருத்தத்தை மேற்கொண்டு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தது. இதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நலத்திட்டங்களில் இட ஒதுக்கீடு சலுகைகள் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Advertisement