ரூ.9.5 கோடியில் செயற்கை ஓடுதள பாதை பணி :காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் 'ஜரூர்'

காரைக்கால்: காரைக்கால் விளையாட்டு மைதானத்தில் ரூ.9.50 கோடி செலவில் செயற்கை ஓடுதள பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

காரைக்கால் வ.உ.சி., கிழக்கு புறவழிச்சாலையில் 1,10,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள் விளையாட்டு அரங்கம், கூடைப்பந்து மைதானம், கால்பந்து மைதானம் மற்றும் 1,500 பேர் அமரக்கூடிய திறந்தவெளி பார்வையாளர் மாடம் போன்ற முக்கிய வசதிகள் உள்ளன.

பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் இந்த விளையாட்டு அரங்கில் மத்திய அரசின் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ.9.5 கோடி மதிப்பில் செயற்கை ஓடுதள பாதை அமைக்கும் பணி கடந்த ஜனவரி 25ம் தேதி மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கவர்னர் கைலாஷ்நாதன் ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

இத்திட்டத்தில், 400 மீட்டர் நீளம் 9.76 மீட்டர் அகலம் கொண்ட ஒரு செயற்கை ஓடுதளப்பாதை அமைக்கப்படவுள்ளது. இதில் தலா 1.22 மீட்டர் அகலம் கொண்ட எட்டு தடங்கள் அடங்கும். இதன் தரை அமைப்பு, 200 மி.மீ., தடிமன் கொண்ட மணல், சரளைக் கலவை அடித்தளம், 200 மி.மீ., தடிமன் கொண்ட ஈரக் கலவை மெக்கடாம், 50 மி.மீ., தடிமன் கொண்ட பிடுமினஸ் மெக்கடாம், 30 மி.மீ., தடிமன் கொண்ட பிடுமினஸ் கான்கிரீட் மற்றும் அதன் மேல் 13 மி.மீ., தடிமன் கொண்ட செயற்கை ஓடுதளப் பாதை அடுக்கு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இது தவிர, 60 மீட்டர் நீளம், 9.76 மீட்டர் அகலம் கொண்ட ஒரு தனி நடைப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக மந்தமாக நடைபெற்ற இப்பணிகள், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisement