தொகுதி மறுவரையறைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு: இன்று கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு

12

சென்னை: 'தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுதும் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தன் லிமிட்டை தாண்டி, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. இன்று கொண்டு வரும் சட்டத் திருத்தத்தால், பெயரளவுக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதியை அதிகரிக்கிறோம் என சொல்லி விட்டு, அவர்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு, மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரிக்கின்றனர்.

இதைத்தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி என சொல்கிறோம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக, தென் மாநிலங்களுக்கு தண்டனையா இது? தமிழர்களையும்-, தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்க பிரதமர் மோடி பார்க்கிறார். டில்லி பா.ஜ.,வுக்கு தமிழர்கள் யார் என காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.

தமிழகத்தின் குரல் வளையை நெரிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு எதிராக, இன்று பார்லிமென்டில் கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பை காட்டும் வகையில், தமிழகத்தில் அனைவரும் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றுவோம்.

இது தமிழகத்திற்கும், டில்லிக்குமான தேர்தல் என நான் சொன்னதை, பா.ஜ., தொடர்ந்து நிரூபிக்கிறது. நான் சொன்னதன் உண்மையான அர்த்தத்தை பா.ஜ.,வே உணர்த்தி விட்டது. கருப்பு சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. தமிழகத்திலுள்ள 8 கோடி தமிழர்களின் ஒற்றை கோரிக்கை இது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

@block_B@ 'தேர்தல் பணி பாதிக்கக்கூடாது' தி.மு.க., மாவட்டச் செயலர்கள், எம்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ஸ்டாலின் பேசியதாவது: தனிப்பட்ட மனிதர்கள், அரசியல் கட்சிகளை விட, மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தான் நம் தலையாய கடமை. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், எம்.பி.,க்களும் ஜனநாயகத்தை காக்க ஓரணியில் திரள வேண்டும். தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும் டில்லி சென்று, ஒருமித்த குரலில் போராட வேண்டும். நெருப்போடு விளையாடாதீர்கள் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். நம் குரலை மதித்து, மத்திய அரசு பின்வாங்கும் வகையில், எம்.பி.,க்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தம் நிறைவேறுகிறதா என்பதை பார்த்து, அடுத்தக்கட்ட போராட்டத்தை நான் அறிவிப்பேன். கருப்புக் கொடி போராட்டத்தால் தேர்தல் பணி பாதிப்பதற்கு, மாவட்டச் செயலர்கள் இடம் கொடுத்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.block_B

Advertisement