இ.சி.ஆரில் உடைந்தது தரைப்பாலம் 20 கி.மீ., சுற்றி செல்லும் வாகனங்கள்

தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், தரைப்பாலம் உடைந்ததால், போக்குவரத்து தடைப்பட்டது.

சென்னை - கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தினசரி, ராமேஸ்வரம், திருச்செந்துார், துாத்துக்குடி, வேளாங்கண்ணி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள், இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே புதுத்தெருவில், கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் காட்டாறு வடிகால்வாயில், 30 ஆண்டு பழமையான தரைப்பாலம் உள்ளது.

இப்பாலம், பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளதால், சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று மதியம் பாலம், திடீரென உடைந்தது. போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரத்தில், 20 கி.மீ., துாரம் சுற்றி, வாகனம் செல்லும் வகையில், மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

'தேர்தல் முடிந்த பிறகு கட்டுமான பணிகள் துவங்கப்படும்' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement