துரோகத்தின் மொத்த உருவம் பழனிசாமி: த.வெ.க., செங்கோட்டையன் ஆவேசம்

நம்பியூர்: ''விஜய்க்கு கூடும் கூட்டம், 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் தானாக வரும் கூட்டம்,'' என, த.வெ.க., தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது: நான் துரோகம் செய்து விட்டதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறுகிறார். நான் என்ன துரோகம் செய்தேன். அவரை முதல்வராக்கியதும், பொதுச்செயலராக்கியதும் தான் நான் செய்த துரோகமா? அண்ணாமலையை வெளியேற்றினால் தான் கூட்டணி என்று பழனிசாமி கூறினார்; சசிகலாவுக்கும் துரோகம் செய்தார்.

சசிகலா சிறையில் இருந்து வரும்போது, யாரும் எந்த உதவியும் செய்யக்கூடாது என தடுத்தார்; 15 நாள் பரோலில் வந்த சசிகலாவை, ஐந்து நாட்களில் திருப்பி அனுப்பினார்; பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கினார்.

அனைத்து உதவிகளையும் செய்த பா.ஜ.,வுடன், 2024 லோக்சபா தேர்தலில் கூட்டணி இல்லை என்று பழனிசாமி அறிவித்தார். எனவே, துரோகத்தின் மொத்த உருவமே பழனிசாமி தான்.

விஜய் தான் அடுத்த முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Advertisement