ஓ.பி.எஸ்., பரதன் இல்லை; ராவணன்: தினகரன் சாடல்

1

தேனி: ''அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ஏமாற்றி, துணை முதல்வர், வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவிகளை பெற்றவர் பன்னீர்செல்வம்,'' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் குற்றம்சாட்டினார்.

தேனி மாவட்டம் போடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து தினகரன் பேசியதாவது:

என் பரிந்துரையால் அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலராகி, அ.தி.மு.க.,வில் உச்சபலன்களை அடைந்த அதே பன்னீர்செல்வம் தான், தற்போது போடி தொகுதி தி.மு.க., வேட்பாளராக உள்ளார்.

முன்னாள் முதல்வர் பழனிசாமியை ஏமாற்றி துணை முதல்வர், வீட்டு வசதித்துறை அமைச்சர், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என பல பதவிகளை பெற்றவர் பன்னீர்செல்வம்.

நான் அ.ம.மு.க.,வை தொடங்கிய நேரத்தில், அதில் சேர்வதாகவும் கூறினார். அவர், பதவி கிடைக்காவிட்டால் தவித்து போய்விடுவார். தி.மு.க.,வைச் சேர்ந்த சிலர் என்னுடன் கூட்டணிக்கு பேசினர். நான் போயிருந்தால் என்னை என் வீட்டிலிருந்து விரட்டி இருப்பர்.

இப்போது பன்னீர்செல்வம் சென்றிருப்பதால் தி.மு.க.,விற்கு கெட்ட நேரம். அவர் பரதன் இல்லை; ராவணன்.

போடி மக்கள் பன்னீர்செல்வத்திற்கு பாடம் புகட்டாவிட்டால் நியாயம், தர்மம் இல்லாமல் போய்விடும். தர்மயுத்தத்தை தர்மன் தான் நடத்த வேண்டும்; துரியோதனன் நடத்தினால் நடக்குமா?

இவ்வாறு தினகரன் பேசினார்.

Advertisement