முந்தி செல்லும் போட்டியில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

நீலாங்கரை: சாலையில், இரு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தி செல்லும் போட்டியில், விபத்தில் சிக்கிய ஒரு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சின்ன நீலாங்கரையைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், 26; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று காலை, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் அக்கரை நோக்கி புறப்பட்டார்.

ஈஞ்சம்பாக்கம் அருகில் சென்றபோது, இவருக்கும், மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த வாலிபருக்கும் முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டுள்ளது.

வளைவு பகுதியில் அதிவேகமாக சென்றபோது, எதிர்பாராதவிதமாக இரண்டு வாகனங்களும் ஒரு ஆட்டோவில் மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த மனோஜ்குமார் மீது, இன்னோவா கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பிய மற்றொரு வாலிபர், வாகனத்தை அங்கேயே போட்டு தலைமறைவானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement