'தொகுதி சீரமைப்பு' பெயரில் தமிழகத்தின் உரிமையை அடக்க முயற்சி: சிற்றரசு ஆவேசம்

1

சென்னை: 'தொகுதி சீரமைப்பு என்ற பெயரில், தமிழகத்தின் உரிமையையும், குரலையும் அடக்க முயற்சிக்கின்றனர்,'' என, அண்ணா நகர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிற்றரசு பேசினார்.

தமிழகத்தின் லோக்சபா தொகுதிகளை சீரமைப்பு செய்ய முயற்சிக்கும் மத்திய அரசை எதிர்த்து, அண்ணா நகர் தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிற்றரசு நேற்று, கருப்பு உடையணிந்து, அவரது தேர்தல் பணிமனையில், கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, 'மற்ற மாநிலங்களை போல் நாங்கள் ஏமாறமாட்டோம்; இது தமிழகம்' என, கோஷங்கள் எழுப்பினர்.

பின், சிற்றரசு பேசுகையில், ''தொகுதி சீரமைப்பு என்ற பெயரில், தமிழகத்தின் உரிமைகளை அடக்க முயற்சிக்கின்றனர். மேலும், லோக்சபாவில் தமிழகத்தின் குரலை ஒடுக்கவும் முயற்சிக்கின்றனர். இதை ஒரு போதும், தமிழகம் பொறுத்துக் கொள்ளாது,'' என்றார்.

தொடர்ந்து, சிற்றரசை ஆதரித்து, புரட்சி அண்ணா தி.மு.க., கட்சியின் தலைவர் புகழேந்தி, அமைந்தகரை வ.உ.சி., காலனி, கலெக்டர் காலனி, இந்திரா காலனி உள்ளிட்ட இடங்களில் ஓட்டு சேகரித்தார்.

பிரசாரத்தில் புகழேந்தி பேசியதாவது:

தமிழக முதல்வர் சொல்வது போல், இது பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நடக்கும் தேர்தல். அனைத்து மத மக்களையும் பிரிக்க சூழ்ச்சி செய்யும், என்.டி.ஏ., கூட்டணிக்கு எதிராக நடக்கும் தேர்தல். மாபெரும் தோல்வியை அ.தி.மு.க., சந்திக்கும். திராவிட மாடல் ஆட்சி பல சாதனைகளை செய்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement