மொறப்பாக்கத்தில் வீணாகிபோன நிழற்குடை

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பயணியர் நிழற்குடை, பயன்படுத்தபடாமலேயே இருக்கைகள் உடைந்து வீணாகியுள்ளன.

உத்திரமேரூர் -- மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில், மொறப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது.

மதுராந்தகம் மொறப்பாக்கம் ஊராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் இடதுபுறத்தில், 2020- - -21-ல், எம். எல். ஏ. , தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

நுழைவாயிலின் வலது புறத்தில், பழைய பேருந்து பயணியர் நிழற்குடை உள்ளது. ஒரே மார்க்கத்தில், ஒரே பகுதியில், அருகருகே இரண்டு நிழற்குடைகள் உள்ளன.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்டவை பழைய நிழற்குடை பகுதி நிறுத்தத்தில் நிறுத்துவதல், அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால், புதிதாக கட்டப்பட்ட நிழற்குடை, பயன்பாடு இன்றி, மது பிரியர்களின் கூடாரமாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.

மேலும், இருக்கைகள் அனைத்தும் உடைந்து வீணாகியுள்ளன. திட்டமிடல் இன்றி நிழற்குடை கட்டப்பட்டதால், மக்களின் வரிப்பணம் வீணாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



Advertisement