சென்டாக் கல்வி உதவித்தொகை திட்டம் புதிய நடைமுறையை எதிர்பார்க்கும் பெற்றோர்
புதுச்சேரி: சென்டாக் நிதியுதவியை நேரடி மானிய திட்டமாக மாற்றிவிட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரி மாநில அரசின் உயர்கல்வித் திட்டங்களில் மிக முக்கியமானது சென்டாக் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைத் திட்டம். குறிப்பாக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் பொறியியல் போன்ற உயர்கல்வியைப் பயில இந்தத் திட்டம் பெரும் ஊன்றுகோலாக உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அரசே கல்வி கட்டணம் நேரடியாக கல்லுாரிகளுக்கு செலுத்துகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் கல்வி கட்டணத்தை கல்லுாரிகளுக்கு செலுத்தவில்லை.
மாணவர்கள் நிதியை திரட்டி கட்டி வந்தனர். 2023--24 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.25,000 புதுச்சேரி அரசால் கடந்த ஜனவரி மாதம் அந்தந்தக் கல்லுாரிகளுக்கு விடுவிக்கப்பட்டது. ஏற்கனவே கல்வி கட்டணம் கட்டிய நிலையில் இந்த நிதி மாணவர்களுக்கு அந்தந்த கல்லுாரிகள் திருப்பி தர வேண்டும்.
ஆனால் அரசு நிதியை வழங்கிய பிறகும், கடந்த மூன்று மாதங்களாகச் சில தனியார் தன்னாட்சி கல்லுாரிகள் அந்தத் தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் காலம் கடத்தி வருகின்றன.
அரசு நிர்வாகம் தனது கடமையைச் செய்து முடித்த பின்பும், கல்வி நிறுவனங்கள் இந்தத் தொகையைத் தங்கள் வசம் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று மன உளைச்சலில் பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வரும் மே மாதம் செமஸ்டர் தேர்வுகள் தொடங்க உள்ளன. இதற்கான தேர்வுக்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைகளைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் உள்ளனர்.
அரசு வழங்கிய உதவித்தொகை கையில் கிடைத்திருந்தால், அதனைக்கொண்டு தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தியிருக்க முடியும். ஆனால், கல்லுாரிகள் நிதியைத் தராமல் இழுத்தடிப்பதால், ஏழைப் பெற்றோர்கள் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைக்கும் கோரிக்கை நேரடிப் பணப் பரிமாற்றம். கல்வி உதவித்தொகையைத் தனியார் கல்லுாரிகளின் கணக்கில் செலுத்தாமல், நேரடியாக மாணவர்களின் வங்கித் தொகையில் வரவு வைக்க வேண்டும். இதனால் கல்லுாரிகள் நிதியைத் தேக்கி வைக்கும் நிலை மாறும். நிர்வாகத் தாமதங்கள் குறைந்து, உரிய நேரத்தில் மாணவர்களுக்குப் பணம் சென்றடையும்.
சென்டாக் நிர்வாகம் மற்றும் புதுச்சேரி அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
மின்சார வாகன காத்திருப்பு காலம் 1 மாதம் வரை அதிகரிப்பு
-
கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 2 ஆண்டு சிறை
-
செங்கையில் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு... கொஞ்சமும் அக்கறை காட்டாத மாவட்ட நிர்வாகம்
-
இன்று இனிதாக ... (22.04.2026) கோவை
-
காங்.,ல் பூசல் இல்லை வேட்பாளர்கள் மறுப்பு
-
ஆபத்தான இடத்தில் அரசு பள்ளி மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயக்கம்