பா.ஜ., வியூகத்தில் சிக்கிய தி.மு.க.,

21

-நமது நிருபர்-

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடியேற்றி, தொகுதி மறுவரையறை திட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். நடப்பது சட்டசபை தேர்தல். ஆனால், லோக்சபா தொகுதி மறுவரையறையை ஓர் ஆயுதமாக தன் கையில் திமுக எடுத்திருக்கிறது

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் பிரசாரம் எடுபடும் அளவிற்கு முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் எடுபடவில்லை என தி.மு.க., வின் வியூக வகுப்பு குழு கொடுத்திருந்த அறிக்கையால், பிரசாரத்தை தீவிரப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த திமுகவிற்கு , லட்டு போல தொகுதி மறுவரையறை விஷயத்தை கொடுத்தது பாஜ.,

அதற்கான மசோதா நேற்று தாக்கலாகும் என்ற தகவல் முதலில் வெளியான உடனேயே, ‛தமிழகத்தை பாதிக்கும் படியோ வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமை கூட்டும்படியோ, தொகுதி வரையறை நடந்தால், சும்மா இருக்கமாட்டோம். தமிழகம் தன் எதிர்ப்பை கடுமையாக காட்டும். இதுவரை பார்க்காத தமிழகத்தை பார்க்கவேண்டியிருக்கும். பழைய தி.மு.க., வை மீண்டும் பார்க்க வேண்டியிருக்கும் ' என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து தொகுதி மறுவரையறை என்பது , சொந்த நாட்டிலேயே தமிழர்களை அகதிகளாக மாற்றும் கருப்புச்சட்டம் என கூறி, தமிழகம் முழுவதும் நேற்று, தி.மு.க.வினர் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தொகுதி வரையறை தி்ட்ட நகலை எரித்து போராட்டம் நடத்தினர். ஆனால் அது பெரிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படியாக நடக்கவில்லை. அடையாள அளவிலேயே நடந்தது. வாக்காளர்களின் கவனத்தையும் ஈர்க்க தவறிவிட்டது.

தொகுதி வரையறை என்பது, புரிந்து கொள்வதற்கு சற்று கடினமான விஷயம் என்பதால், பிரசாரம் செய்யக்கூடிய அடுத்த 5 நாட்களில் திமுக அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லும் என்பது கேள்வக்குறியாக உள்ளது.

பா.ஜ.,வும் இதில் அரசியல் ஆட்டம் ஆடுகிறது. இந்த மசோதா விஷயத்தை சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்திக் கொள்ளவே இந்த நேரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மசோதா 2023லேயே சட்டமாகிவிட்டது.

ஆனால் அதை செயல்படுத்த தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும. அதற்காகத்தான் தொகுதி மறுவரையறை செய்கிறோம் என்று பா.ஜ., பேசி வருகிறது. தொகுதி மறுவரையறை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டாயம் என்பதை பேசவில்லை.

இந்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பாஜவிடம் இல்லை. இது பற்றி கடந்த 4ம் தேதி காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான ப.சிதம்பரம், ‛தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீடு அளிக்கும் அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றும் அளவுக்கு லோக்சபா, ராஜ்யசபாவில் பாஜவுக்கு பெரும்பான்மை இல்லை, தமிழகம் மேற்கு வங்கத்தில் 67 லோக்சபா எம்பிகளும், 25 ராஜ்யசபா எம்பிகளும் பாஜவுக்கு எதிராக உள்ளனர். இவர்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, இந்த இரு மாநிலங்களிலும் தேர்தல் நடக்கும் நேரத்தில், பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளனர்' என்றார்.

மசோதா நிறைவேறினால் நலன். ஒருவேளை மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றால், ‛பெண்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை எதிர்க்கட்சிகள் தடுத்து விட்டன'என்று பிரசாரம் செய்யலாம் என்பதே பா.ஜ., வின் திட்டம். மேற்கு வங்க தேர்தலை குறிவைத்தே பா.ஜ., இதை செய்துள்ளதாக கூறப்படுகிறது

அதற்கேற்ப பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி இது குறித்து, காங்கிரஸ், தி.மு.க., போன்ற கட்சிகள் ஆண் வாரிசைத்தான் அதிகார மேடையில் அமர்த்துகின்றன. பார்லிமென்டும் சட்டசபைகளும் பெண்களால் நிறைந்திருப்பதை அவர்கள் விரும்பவில்லை. பெண்கள் இட ஒதுக்கீட்டை நேரிடையாக எதிர்க்க முடியாது என்பதால், தொகுதி வரையறை என்ற பெயரில் எதிர்க்கின்றனர்' என்றார்.

மேலும் தொகுதி வரையறையால் தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்று மோடியும் அமித்ஷாவும் உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கான லோக்சபா தொகுதிகள் குறையும் எனக்கூறி பதற்றத்தை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்கிறார். தேர்தலுக்கு சில நாட்களே இருப்பதால் இதை வைத்து கட்டுக்கதை பரப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று நினைக்கிறார. தமிழக மக்கள் புத்திசாலிகள் என்பதால் திமுகவின் விஷம பிரசாரம் ஒரு நாளும் எடுபடாது என்று அவர் கூறினார்.

லோக்சபாவில் நேற்று, தொகுதி வரையறை சட்ட மசோதா மீதான விவாதத்தில் பேசிய மோடி, ‛மகளிர் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயம். தங்களுக்கான உரிமையை தடுப்பவர்களை பெண்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த மசோதா நிறைவேறினால் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்து விடும் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்ற.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் , அதன் பெருமையை எதிர்க்கட்சிகளே எடுத்துக் கொள்ளட்டும். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் .

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொன்ன பின்பும், சிலர் மசோதாவை எதிர்க்கின்றனர். இதனால் பாஜவுக்கு இருந்த திருஷ்டி கழிந்துவிட்டது என்று தொகுதி மறுவரையறை பெண்கள் இடஒதுக்கீட்டுடன் தொடர்பு படுத்திதான் பேசினார்.ஆனாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்று இதை எதிர்க்கின்றன

தமிழகத்திற்கான தொகுதிகள் குறைந்துவிடும் என்று திமுக அதை அரசியல் ஆக்குகிறது. மகளிர் இட ஒக்கீட்டை தடுக்க காங்கிரஸ், திமுக சதி செய்வதாக பா.ஜ., குற்றம்சாட்டுகிறது.

பா.ஜ., செய்த வியூகத்தில் எதிர்க்கட்சிகள் சிக்கி கொண்டது போல் தான் தெரிகிறது.

பாஜவின் திட்டம் எதுவாக இருந்தாலும், தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னையா என கூட்டணியில் உள்ள அதிமுக தவித்து நிற்கிறது. தொகுதி வரையறையை வரவேற்றால் அதை வைத்து திமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்து ஓட்டுகளை திருப்பலாம். எதிர்த்தால் கூட்டணி கட்சியான பா.ஜவின் நிலைப்பாட்டுக்கு எதிராக போகும் என்பதால் இந்த விஷயங்களில் தன் நேரிடையான கருத்துக்களை சொல்லாமல் நழுவுகிறார் பழனிசாமி. இது பற்றி அமித் ஷாவிடம் அவசரம் அவசரமாக பேசியதாக கூறப்படுகிறது.

பிரதமரும், உள்த்துறை அமைச்சரும் நேற்று பார்லியில் விளக்கம் அளித்த பின் தமிழகத்திற்கு தொகுதி ரீதியாக எந்த குறையும் வராது என்ற தோற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு எதிரான பிரசாரத்தை தொடரலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பத்தில் தி.மு.க., இருக்கிறது.

Advertisement