இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்; பஹல்காம் தாக்குதல் நினைவு நாளில் ராணுவம் எச்சரிக்கை

9

நமது நிருபர்




பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி, பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணியர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில், கர்நாடகாவை சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான பரத் பூஷன், ஷிவமொக்காவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ராவ், 47, ஆகிய இருவரும் அடங்குவர்.


இவர்கள் இருவரும் தங்கள் மனைவி, மகன் கண் முன்னே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரைப் பொறுத்தவரை, அந்தத் தாக்குதல் குறித்த வே தனை நிறைந்த நினைவுகள் இன்றும் அவர்களை விட்டு அகலாமல் தொடர்கின்றன.


தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இந்த துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.


இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில், ''நாட்டிற்கு எதிரான எந்தவொரு தீய செயலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். எதிரான செயல்களுக்குப் பதிலடி உறுதி. எப்போதும், நீதி நிலைநாட்டப்படும் '' என தெரிவித்துள்ளது.


மேலும், 'ஆப்பரேஷன் மகாதேவ்' நடவடிக்கையைக் காட்டும் ஒரு புகைப்படத்தையும், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தீவிரமாகத் தேடிப்பிடித்து அவர்களை ஒழித்ததையும் ராணுவம் தெளிவுப்படுத்தியது. ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடர்கிறது என்றும் ராணுவம் வெளியிட்ட படத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement