நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சிறப்பு மண்டலம்தி.மு.க., ஆட்சியில் அமையும்: ராஜேஸ்குமார் உறுதி

நாமக்கல் :நாமக்கல்லில், தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில், நாமக்கல் தொகுதி வேட்பாளர் ராணியை ஆதரித்து, தி.மு.க., இலக்கிய அணி தலைவர் அன்வர் ராஜா மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில், எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:தமிழகத்தில் முட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு, நாமக்கல் மண்டலம் மிக முக்கியமான மையமாக திகழ்கிறது. இங்குள்ள, 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில், எட்டு கோடிக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு, நாளொன்றுக்கு, ஆறு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து, வளைகுடா நாடுகளான ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கன்டெய்னர் மூலம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பண்ணை தொழிலை மேலும் நவீனப்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி பொருளாதார சிறப்பு மண்டலம் அமைக்கப்படும்.

மேலும், பண்ணையாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, கோழிகளுக்கான தடுப்பூசிகள் குறைந்த விலையில் கிடைக்க, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கும். நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சாலை அமைக்கும் பணி மற்றும் மோகனுார் டவுன் பஞ்.,க்கான தனி குடிநீர் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த, 5 ஆண்டுகளில், தி.மு.க., அரசு பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளது.



மீண்டும், தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாகவும், முதியோர் உதவித்தொகை, 2,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும். எனவே, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளி ராணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, ஒன்றிய செயலாளர் பழனிவேல், தொகுதி பார்வையாளர் முனவர் ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement