வீட்டின் படுக்கையறையில் பதுங்கிய சிறுத்தை பிடிபட்டது

மைசூரு: வீட்டின் படுக்கையறையில் பதுங்கியிருந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர்.

மைசூரு சாமுண்டி மலைக்கு அருகேயுள்ளசித்தார்தா லே - அவுட்டில் வசிப்பவர் சுரேஷ், 43. இவர் தன் மனைவி சுஜாதா, மாமியார் ஷைலஜாவுடன் வீட்டில் இருந்தார். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் ஏதோ சப்தம் கேட்டது.

சப்தம் வந்த திசையை நோக்கி சுரேஷ் சென்றார். அப்போது, படுக்கையறையில் உள்ள கட்டிலின் கீழ் சிறுத்தை ஒன்று பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதைப் பார்த்தவுடன் அச்சம் அடைந்தார். உடனடியாக, குடும்பத்தினர் அனைவருடன் வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டின் கதவுகளை வெளிப்பக்கமாக பூட்டினார்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் வலையை வீசி சிறுத்தையை பிடித்தனர். இச்சம்பவம் சித்தார்தா லே- அவுட் குடியிருப்பு வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement