மின் கட்டணம் யூனிட்டுக்கு 56 பைசா அதிரடி உயர்வு

பெங்களூரு: மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 56 பைசா உயர்த்தி கர்நாடக அரசு, நேற்று உத்தரவிட்டது. புதிய கட்டண உயர்வு, மே 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

கர்நாடகாவின் பெஸ்காம் உட்பட அனைத்து மின் வினியோக நிறுவனங்களும், நஷ்டத்தை காரணம் காட்டி, மின் கட்டணத்தை உயர்த்தும்படி, கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணையத்தில், வேண்டுகோள் விடுத்தன.

இதை ஏற்று கொண்ட மின் ஒழுங்கு முறை ஆணையம், யூனிட்டுக்கு 56 பைசா மின் கட்டணத்தை உயர்த்த, ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக, அரசுக்கு கோரிக்கை அனுப்பியது. கடந்த 2024 - 25ம் ஆண்டு, மின் விற்பனை மூலமாக, 34,084 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மின் ஒழுங்கு முறை ஆணையம் எதிர்பார்த்தது.

ஆனால் 32,019 கோடி ரூபாய் கிடைத்தது. 2,065 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை பொது மக்களிடம் இருந்து, வசூலிக்கும் நோக்கில் மின் கட்டணத்தை உயர்த்த, ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதன்படி நேற்று மாநில அரசு, மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவு வெளியிட்டது. மே 1ம் தேதி முதல், புதிய கட்டணம் அமலுக்கு வரவுள்ளது.இது வர்த்தகம் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு பொருந்தும்.

Advertisement