என் குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்: ராமதாஸ் புகார்

14

சென்னை: ''என் குடும்பத்தை சிதைத்த பெருமை, அன்புமணி மனைவி சவுமியாவையே சேரும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.



அவர் அளித்த பேட்டி: பா.ம.க.,வை கைப்பற்ற வேண்டும் என்பதே அன்புமணியின் எண்ணமாக இருந்ததை, இப்போது தான் புரிந்து கொண்டேன். கட்சி தலைவர் பொறுப்புக்கு ஏற்றாற்போல நடந்து கொள்ளாததால், தலைவர் பதவியை நானே எடுத்துக் கொண்டு, என் மகள் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராகவும், 25 ஆண்டுகள் உழைத்த ஜி.கே.மணியை கவுரவ தலைவராகவும் நியமித்தேன்.

தமிழகம் முழுதும் அவதுாறு பரப்பி வரும் அன்புமணி, கூசாமல் பொய் பேசக்கூடியவர்; அவரது குடும்பத்தினரையும் பொய் சொல்ல பழக்கி வைத்துள்ளார். குடும்பத்தை சிதைத்த பெருமை அன்புமணிக்கும், அவரது மனைவி சவுமியாவுக்கும் உண்டு. என் பேத்திகளையும் அதேபோல பழக்கி விட்டனர்; என் இறப்பு எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.



குலதெய்வம் என்று என்னை அழைத்த கட்சியினரை, பணம் கொடுத்து எனக்கு எதிராக பேச வைத்துள்ளனர். மருத்துமனையில் மூன்று நாட்கள் இருந்தேன். கட்சியினர் தேம்பி அழுதனர். ஆனால், அன்புமணியும், அவரது குடும்பத்தினரும் வந்து பார்க்கவில்லை; போனில் கூட விசாரிக்கவில்லை; அம்மாவை மட்டும் வந்து பார்க்கிறார்.


எனக்கு வயதாகி விட்டது என்கிறார். நான் தினமும் நடக்கிறேன்; நீச்சல் அடிக்கிறேன்; வயதானாலும் வலிமையாக இருக்கிறேன். மூன்று மாத குழந்தையை வைத்துக் கொண்டு, கூசாமல் பொய் பேசி ஓட்டு கேட்கின்றனர். என் பேத்திகள் கண்ணீர் சிந்துவதை பார்த்து, 'அய்யோ பாவம்' என சிலர் ஓட்டு போட்டு விடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.


@block_G@

'20 வயது பெண்ணை திருமணம் செய்ததாக கேவலப்படுத்துகின்றனர்' @

@ராமதாசின் மகளும், அன்புமணியின் அக்காவுமான ஸ்ரீகாந்தி அளித்த பேட்டி: தன் தாத்தாவை பார்க்க விடாமல் தடுப்பதாக அன்புமணியின் மகள் கூறியிருக்கிறார். அவர் குழந்தையை கொண்டு வந்து, தாத்தாவிடம் காட்டியிருக்க வேண்டும். அனைத்து பேரப் பிள்ளைகளிடம் பாசம் கொண்டவர் ராமதாஸ்.


ராமதாசின் படம், பெயர் வேண்டும். ஆனால், ராமதாஸ் வேண்டாம் என அன்புமணி நினைக்கிறார். எங்கள் குடும்பத்தைப் பிரித்தது அன்புமணியும், சவுமியாவும் தான். இப்போது அப்பா, அம்மா கூட யாரும் இல்லாததால், அவர்களை கவனித்துக் கொள்ளவே, நாங்கள் அப்பாவுடன் இருக்கிறோம்.


இப்போது, ராமதாசின் சொந்த வாழ்க்கையை சொல்லி அவமானப்படுத்துகின்றனர். அவர், 20 வயது பெண்ணை திருமணம் செய்தது போல கேவலப்படுத்துகின்றனர். அது, 45 ஆண்டுகளுக்கு முன் நடந்தது; என் அம்மா சம்மதத்துடன் தான் நடந்தது. எல்லா குடும்பத்திலும் நடப்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.block_G

Advertisement