இதே நாளில் அன்று

ஏப்ரல் 19: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சீரன்சிரா கிராமத்தில், சிறிய உணவக உரிமையாளரான கே.டி.மார்க்கோஸ் - கிரேசி தம்பதியின் மகளாக, 1977ல் இதே நாளில் பிறந்தவர், அஞ்சு எனும் அஞ்சு பாபி ஜார்ஜ்.

ஒற்றை சிறுநீரகத்துடன் பிறந்த இவர், கோட்டயம் சி.கே.எம்.கொரட்டி பள்ளி மற்றும் விமலா கல்லுாரியில் படித்தார். சிறுவயதிலேயே நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதலில் ஆர்வமாக இருந்தவரை, இவரது தந்தை, 10 கி.மீ., சைக்கிளில் அழைத்துச் சென்று, தடகளத்தில் பயிற்சி பெற வைத்தார்.

இவர், 2003ல், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான, பாரிஸில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்று, இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை பதிவு செய்தார். 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில், 6.83 மீட்டர் தாண்டி ஐந்தாவது இடம் பிடித்து, சாதனை படைத்தார்.

அடுத்தடுத்து ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார். சுங்கத்துறையில் பணியாற்றும் இவர், இந்திய தடகள கூட்டமைப்பின் மூத்த துணைத் தலைவராகவும் இருக்கிறார்.

'அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவருக்கு இன்று, 49வது பிறந்த தினம்!

Advertisement