அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைக்கிறார் டி.ஆர்.எஸ்.,

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர், டி.ஆர்.சண்முகசுந்தரம் செய்து வரும் தேர்தல் பிரசாரம், பிற அரசியல் கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டுள்ள டி.ஆர்.சண்முகசுந்தரம், பக்கெட் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இது குறித்து அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:

நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கிராமம் கிராமமாக சண்முகசுந்தரத்திற்கு ஓட்டுக் கேட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

சண்முகசுந்தரம் பிரசாரம் செய்ய வருவதாக, அறிவிப்பு வந்தவுடன், கிராம மக்களே ஒன்று திரண்டு அவரை எதிர்கொண்டு வரவேற்று, ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சண்முகசுந்தரம் தமது ஆதரவாளர்களுடன், தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று, தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பிரசாரம் செய்து வருவதால், இவருக்கு பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. ''நான் வெற்றி பெற்றால் உங்கள் எதிர்பார்ப்புக்கு மேலாக உங்களுக்கு உதவி செய்வேன்,'' என வாக்குறுதி அளித்துள்ளார்.

அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய சிலர், சுயேட்சையாக களம் காணும் சண்முகசுந்தரத்துடன் தேர்தல் பிரசாரம் செய்ய செல்வது, பிற கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்று ஜடையம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்தனர்.

''நான் வெற்றி பெற்று வந்தவுடன், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எனது முதல் பணியாகும்,'' என மக்களிடம் அவர் உறுதியளித்தார்.

இவ்வாறு, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement