கர்நாடக காங்., - எம்.எல்.ஏ., வீடுகளில் ஈ.டி., 'ரெய்டு'

பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூரு ஜெயநகரில் வசிப்பவர் ஸ்ரீகிருஷ்ணா, 35. சாப்ட்வேர் இன்ஜினியர். 2020ம் ஆண்டு போதை பொருள் விற்ற வழக்கில், இவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், தனியார் நிறுவனங்களின் இணையதளத்தை முடக்கி, அந்நிறுவனங்களுக்கு சொந்தமான பிட்காயின்களை விற்று, மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

அப்போது, பா.ஜ., ஆட்சியில் இருந்தது. ஸ்ரீகிருஷ்ணா ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2023ல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பிட்காயின் முறைகேடு வழக்கை எஸ்.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியது.

பிட்காயின் முறைகேடு வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததை அறிந்து, அமலாக்கத் துறையும் களத்தில் குதித்தது. இதில், பெங்களூரு சாந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிசின் மகனும், கர்நாடக இளைஞர் காங்., முன்னாள் தலைவருமான முகமது நலபட்டிற்கும், ஸ்ரீகிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

பிட்காயின் விற்பனையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து, முகமது நலபட் வங்கிக் கணக்கிற்கு, 10 லட்சம் ரூபாய் வந்ததும், தெரிந்தது. இந்நிலையில், நேற்று காலை 6:30 மணிக்கு அசோக் நகரில் உள்ள, எம்.எல்.ஏ., ஹாரிஸ் வீடு, அதே பகுதியில் உள்ள முகமது நலபட் வீடு, இவரது தம்பி ஓமர் நலபட் வீடு, நான்கு அலுவலகங்கள், ஸ்ரீ கிருஷ்ணாவின் வீடு, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ரகுமான் கான் பேரன் ஹக்கீப் கான் வீடு உட்பட 12 இடங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இரவு வரை நீடித்த சோதனையில், வங்கி கணக்கு விபரங்கள், சில ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றி எடுத்து சென்றனர்.

Advertisement