யாருக்கும் அஞ்சாத நெறி

உலகத்தை ஊடுருவி, உலக நடப்புகளை உள்ளங்கையில் கொடுத்து உலாவரும் ஊடகங்களுள் இன்றும் வாடாமல் விரிந்து மலர்ந்து கொண்டிருக்கும் 'தினமலர்', பலதரப்பு வாசகர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்பது பெருமைக்குரியது.

உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தந்திடாமல், உண்மைத் தன்மை சிறிதும் மாறாமல், செய்தியை செய்தியாகவே அளித்து, தரம் தாழ்ந்த விமர்சனங்களை முற்றிலுமாக தவிர்த்து, எவ்வித சார்புமின்றி, நடுநிலையோடு செய்திகளை தந்து, பத்திரிகை தர்மத்தை காக்கிறது. ஒரு நல்ல நாளிதழுக்கு இலக்கணமாக திகழ்கிறது தினமலர்.

நாட்டுக்கு எது தேவை என்று உணர்ந்து, வளைதலோ நெளிதலோ சிறிதுமின்றி, உண்மை செய்திகளை தமிழ் கூறும் நல்லுலகிற்குகொண்டு சேர்த்திடும் உயரிய செய்தித்தாளாக தினமலர் நாளிதழ் விளங்குகிறது.

மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு விளங்கும் முகமாக, உயர்கல்வி வழிகாட்டு முகாம்கள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி, மாணவர்கள் தங்களின் கனவுகளை அடைய ஊக்குவித்து வருகிறது.

மக்கள் பயன்பெறும் வகையில் செய்திகளை வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது. சமுதாய நலனுக்கு உகந்ததை வழங்கி, மிகவும் நேர்த்தியாக வெளிவருகிறது தினமலர். தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும் தினமலரின் சமுதாய பணியினை மனதாரப் பாராட்டுவதோடு, இந்த நாளிதழின் பணி இன்னும் பல யுகங்களை கடந்து பீடுநடை போட வேண்டும்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறி. இதுவே தினமலர். இதே தினமலர், மேலும் சிறப்புடன், பல நுாறு ஆண்டுகள் வெளிவரவும், தினமலரின் வாசகர் வட்டம் தொடர்ந்து விரிவடையவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.



முனைவர் நா. வெங்கடரமணன்

இயக்குனர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்வி குழுமம், சென்னை

Advertisement