ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு எதிராக பிரசாரம் செய்த திருமாவளவன்: வி.சி.க.,வினர் கடும் அதிருப்தி

13

சென்னை: சென்னை, திரு.வி.க., நகரில், போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பொற்கொடிக்கு எதிராக, வி.சி.க., தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது, கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அந்த தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியபோது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஏற்கவில்லை.

'என்னை போன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும், ஒரு தலைவரை எதிர்த்து வி.சி.க., போட்டியிடாது' என, திட்டவட்டமாக கூறினார்.

அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, திரு வி.க., நகர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுகிறார்.

ஜெகன் மூர்த்திக்கு ஆதரவாக செயல்பட்ட திருமாவளவன், பொற்கொடிக்கு எதிராக, திரு.வி.க. நகரில் பிரசாரம் செய்தார். இது வி.சி.க.,வினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மாற்று கட்சியில் இருந்தாலும், வி.சி.க., நிர்வாகிகள் பலருக்கு, ஆம்ஸ்ட்ராங் உதவி செய்தார். அதனால், அவர் மறைந்தாலும் அவர் குடும்பத்தினர் மீது வி.சி.க.,வினர் மரியாதை வைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, தனி கட்சி ஆரம்பித்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டாலும், திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். இதனால், பொற்கொடிக்கு எதிராக அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என, எதிர்பார்த்தோம்.

ஆனால், பொற்கொடிக்கு எதிராக திருமா வளவன் பிரசாரம் செய்துள்ளார். திருமாவின் செயல், வி.சி.க.,வினருக்கு நெருடலை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement