கைதி ஞானசேகரனுக்கு வலிப்பு மருத்துவமனையில் அனுமதி

9

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு, திடீர் வலிப்பு ஏற்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சென்னை, கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் ஞானசேகரன், 37; தி.மு.க., அனுதாபி. இவர், சென்னை அண்ணா பல்கலை அருகே, பிரியாணி கடை நடத்தி வந்தார்.

கடந்த, 2024, டிச., 23ம் தேதி இரவு, பல்கலை வளாகத்தில் காதலருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை, பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை மற்றும், 90,000 ரூபாய் அபராதம் விதித்தது. அதைத் தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு ஞானசேகரனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு ஞானசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க., குற்றச்சாட்டு இது தொடர்பாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரன், நேற்று அதிகாலை சிறையில் இருந்து, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கபட்டுள்ளார்.

ஏற்கனவே, 'யார் அந்த சார்?' என்ற உண்மை தெரிய விடாமல், அவசர கதியில் முடிக்கப்பட்ட வழக்கை, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மீண்டும் விசாரித்து, 'யார் அந்த சார்' என்பது கண்டறியப்படும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்படப் போவதை உணர்ந்துவிட்ட தி.மு.க., அரசு, பயத்தில், காபந்து அரசாக இருக்கும்போதே, இந்த வழக்கின் போக்கை ஒட்டுமொத்தமாக ஆதாரமின்றி முடித்து விட நினைக்கிறதோ என்ற சந்தேகம், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு என்ன நேர்ந்தாலும், அதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement