ஆராய்ந்து பார்க்காமல் ஓட்டு போட்டால் ஆபத்து தான்!

21

- பி.அருணா,
சமூக ஆர்வலர்,
dmrcni@dinamalar.in

தமிழகத்தை ஆண்ட ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி, ராஜகோபாலாச்சாரி, காமராஜ், பக்தவத்சலம் காலத்திற்கு பின் ஏற்பட்ட திராவிட ஆட்சி காலத்தில் கலாசார சீரழிவு கொஞ்சமல்ல. தி.மு.க., 1949ல் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்டு பிரசாரத்திற்கு எம்.ஜி.ஆர்., என்ற பெரும் நடிகரை நன்றாக பயன்படுத்தினர். எம்.ஜி.ஆர்., பெயரை சொன்னால் மக்கள் கூடுவர், 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என்று கட்சியை வளர்த்தனர். 1957ல் தமிழக சட்டசபை தேர்தலில், 15 இடங்களில், எம்.ஜி.ஆரால், தி.மு.க., வெற்றி பெற்றது.

அண்ணாதுரை காலத்தில் எம்.ஜி.ஆர்., ஒரு விளம்பரப் பதாகை போல் பயன்படுத்தப்பட்டார். ஆனால், தன் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, ரசிகர் மன்ற கட்டமைப்பை வளர்த்து, தனிக் கட்சி துவக்கி, மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார்.

பிதாமகன்




ராஜாஜி, 1967ல் கூட்டணியை உருவாக்கி, அண்ணாதுரையை முதல்வர் ஆக்கினார். வன்னியர் கட்சி, இன்னர்வீல் கட்சி இரண்டையும் சேர்த்து, கூட்டணி அமைச்சரவையை உருவாக்கினார். தமிழகத்தில் கூட்டணியின் பிதாமகன் ராஜாஜி தான்.

ஆனால், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தையும், எம்.ஜி.ஆர்., குண்டடிபட்ட விவகாரத்தையும் கையிலெடுத்து, இதற்கு காரணம் காங்கிரஸ் தான் என பொய்க் காரணங்களைச் சொல்லி, தமிழகத்திலிருந்து காங்கிரசை ஓட ஓட விரட்டியது தி.மு.க., அதன் பின், அண்ணாதுரையும் காலமானார்.

அடுத்த குறி, எம்.ஜி.ஆர்., மேல் விழுந்தது. கட்சியின் பொதுக் குழு 1972ல் நடந்தபோது, கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர்., திகில் அடைந்த கருணாநிதி, அவரை கட்சியிலிருந்து நீக்கி, தி.மு.க.,வை முழுதுமாக தன்வசமாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர்., உடனடியாக, அ.தி.மு.க.,வைத் துவக்கினார்.

அப்போதைய தி.மு.க., ஆட்சி, பல ஊழல்களை செய்தது. அதை வெளிச்சம் போட்டுக் காட்டிய எம்.ஜி.ஆர்., டில்லிக்குச் சென்று, அப்போதைய பிரதமர் இந்திராவிடம் ஊழல் பட்டியலைக் கொடுத்தார். இந்தியாவில் அவசரநிலை கொண்டு வரப்பட்டது. ஊழல்மிக்க தி.மு.க., ஆட்சியை இந்திரா கலைத்து, ஊழலை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் அமைத்தார்.

தமிழக வரலாற்றில் இது நீங்கா இடம் பெற்றுவிட்டது. பின், 1977ல் பிரதமர் இந்திரா தயவில், எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் ஆனார். பின், ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாயை ஆதரிக்கத் துவங்கினார். இதை மோப்பம் பிடித்த கருணாநிதி, இந்திராவின் காலைப் பிடித்து, எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கலைத்து, இந்திராவின் ஆதரவுடன், தமிழக முதல்வர் ஆகிவிட்டார்.

அதன் பின், எம்.ஜி.ஆர்., தனியாக தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது, நிதிப் பற்றாக்குறையால் வீடு, சத்யா ஸ்டூடியோ போன்ற சொத்துக்களை அடமானம் வைத்து, தேர்தலுக்கு நிதி சேர்த்தார். நிதி இல்லாமல் கட்சியையும் தேர்தலையும் சந்திப்பது தற்கொலைக்கு சமம் என்று புரிந்து கொண்டார்.

பழிவாங்கல்




சாராயக் கடைகளையும், மதுபான ஆலைகளையும் நடத்தும் உரிமையை கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார். அதே நேரத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளை தனியாருக்கு தாரை வார்த்தார். அன்றிலிருந்து மருத்துவ, இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஆளும் கட்சிக்காரர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தன.

ஏழ்மையில் வறண்ட கட்சிக்காரர்கள் வளம் கொழித்து தொழிலதிபர்களாகவும், இணைவேந்தர்களாயினர். மத்திய அரசிடம் இணக்கமாக இருக்கும் வகையில், ஜெயலலிதாவை எம்.பி.,யாக்கி, கட்சிக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.,

நல்ல ஆங்கில அறிவும், பேச்சுத் திறமையும் அவரை டில்லி அரசியல் வட்டாரத்தில் புகழ் பெற செய்தது. இது சரியாக ஆங்கிலம் பேசதெரியாத திராவிட அரசியல் தரகர்களான கம்பி மீசை கண்ணாயிரத்திற்கும், கருப்பு துண்டு கந்தசாமிக்கும் பொறாமையும் வெறுப்பையும் உண்டாக்கியது.

உடனே, தி.மு.க.,வினரும் டில்லி அதிகார மையத்தோடும், அரசியல் தலைவர்களோடும் நட்புடன் பழகினர். இது எதிர்காலத்தில் தேசிய கட்சிகளோடு கூட்டு சேர்ந்து மந்திரி சபையில் இடம் பிடிக்க உதவியது.

எம்.ஜி.ஆர்., வகுத்த பாதையில் தி.மு.க.,வினரும் பயணப்படத் துவங்கி, சாராய ஆலை, கல்வி நிறுவனங்கள் வாயிலாக கோடிக்கணக்கில் கொழிக்கத் துவங்கினர். பின், காங்கிரசின் ராஜிவ், அ.தி.மு.க.,வின் ஜெயலலிதா போன்றோரின் பழிவாங்கல், சினேகம் என பல சம்பவங்கள் அரங்கேறின.

தமிழகத்தில் அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாயிற்று. 'கான்ட்ராக்ட், கமிஷன், கலெக்ஷன்' என்ற ரீதியில் திராவிடக் கட்சிகள் இரண்டும், ஆயிரக்கணக்கான கோடிகளைக் குவித்து விட்டனர்.

திராவிட கட்சிகளின் தாரகமந்திரம், காலை பிடிப்பது; எழுந்தவுடன், உதவியவரை எட்டி உதைப்பது. இதைத்தான் கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்து வந்தனர்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்து, அக்கட்சி தலையெடுக்கத் துவங்கி இருந்தாலும், தீவிரவாதிகளின் கொடூரச் செயல்களால், அது செல்வாக்கை இழந்தது. உடனே மோப்பம் பிடித்த கருணாநிதி, பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்தபடியே, காங்கிரசின் சோனியாவைச் சந்தித்து, நட்பு பாராட்டினார்.

இந்திராவை தான் வசைபாடிய சம்பவங்களை, இங்கே தமிழக காங்கிரசாரையும் மறக்கடிக்கச் செய்து, சோனியாவின் அன்புக்குப் பாத்திரமானார். பின், காங்கிரஸ் துணையோடு, தமிழகத்தில் கோலோச்சத் துவங்கியது தி.மு.க., அதே சமயம், இங்கு காங்கிரசை செல்லாக்காசாக்கும் வேலைகளையும் துவக்கினார் கருணாநிதி. ஆட்சி பக்கமே அண்ட விடாமல், அக்கட்சியில் கோஷ்டிகளை உருவாக்கி, இன்று வரை அது வெற்றிகரமாக நடந்தேறி வருகிறது. ஆனால், தமிழக மக்கள் ஒவ்வொரு ஐந்தாண்டும், ஆட்சியை மாற்றிக் கொண்டே இருப்பர்.

ஜெயலலிதா, 2011 தொடங்கி, உடல் நலம் குன்றி இறக்கும் வரை, முதல்வராக இருந்தார்.

கொடுங்கோல் ஆட்சி




கருணாநிதியுடன் ஊழல்களையும் பார்த்தாகி விட்டது; அ.தி.மு.க.,வின் ஊழல்களையும் பார்த்தாகி விட்டது.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின், 2021 முதல் இன்று வரை நடத்தும் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து, பெண்களாகிய நாம் அனுபவித்த அவலங்களை வெளியில் கூட சொல்ல முடியாமல், மகிழ்ச்சியுடன் மீண்டும் தி.மு.க.,விற்கு ஓட்டு போடப் போகும் மக்களை காணமுடிகிறது. இந்த ஐந்து ஆண்டு திராவிட மாடல் ஆட்சி, தமிழக சரித்தர பதிவேட்டில் கொடுங்கோல் ஆட்சி என்று பெயர் பெரும்.

அன்றைய மாபெரும் எழுத்தாளார் ஜெயகாந்தன், 'தி.மு.க., என்பது ஒரு அரசியல் இயக்கம் அல்ல; அது மனித மரியாதைக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நம் கலாசாரதிற்கும் ஏற்பட்டிருக்கும் ஓர் பேரழிவின் அறிகுறி' என்றார். அது தற்போது நிதர்சனமாகி விட்டது!

கடந்த, 1949ல், தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற கட்சியை பற்றி, ஈ.வெ.ரா., கூறியது முற்றிலும் உண்மை. 'நல்லவர்கள், நாணயமானவர்கள், நேர்மையானவர்கள், உண்மையானவர்கள் தவிர, அனைவரும் தி.மு.க.,வில் சேரலாம்' என்றார். உண்மையாகி விட்டது அல்லவா!

மக்கள் இலவச பொ ருள்களுக்கும், உழைக்காமல் கிடைக்கும் மானியத்துக்கும், 8,000 ரூபாய் கூப்பனுக்கும், மரியாதையை இழப்பதால், தமிழகத்தின் சமுதாய வளர்ச்சியும், கலாசாரமும், நாகரிகமும் சீரழிகிறது.

வள்ளுவர், 'தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பைத் தரும்' என்று கூறி இருக்கிறார். அவர் சொல்லியபடி, ஆராய்ந்து பார்க்காமல் ஆட்சியில் அமர ஒருவரை தேர்ந்தெடுப்பது, அடுத்த தலைமுறையினரையும் பெரும் துன்பத்தில் தள்ளிவிடும்.

Advertisement