அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும்: கார்த்திக் தண்டபாணி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முழு வீச்சில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என, தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வாக்குறுதி அளித்தார். தமிழகத்தில் நாளை நடக்க உள்ள 17வது சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவிற்கு வந்தது.

இந்நிலையில், செங்கை தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, நேற்று காலை, இறுதிக்கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது கார்த்திக் தண்டபாணி கூறியதாவது:

செங்கல்பட்டு தொகுதியில், தி.மு.க., சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நான், நிச்சயமாக வெற்றி பெறுவேன்.

நான், சட்டசபை உறுப்பினராக பொறுப்பேற்ற பின், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், செங்கை தொகுதியை, மாநில அளவில் முதன்மை தொகுதியாக கட்டமைப்பேன்.

தொகுதியில் உள்ள 39 ஊராட்சிகள் மற்றும் மூன்று நகராட்சிகளில், 100 சதவீதம், மழைநீர் வடிகால்வாய் அமைக்க திட்டம் வகுக்கப்படும்.

இந்த வடிகால்வாய்கள் அனைத்தும், அருகிலுள்ள ஏரியில் இணைக்கப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்படும். ஒவ்வொரு ஏரியும் 'வரத்து' மற்றும் 'போக்கு' என, இருவித வடிகால்வாய்களால் இணைக்கப்படும்.

இதனால், மழைக்காலங்களில் தெருக்களில் மழை நீர் தேங்காது. போக்குவரத்து பாதிக்கப்படாது.

இத்திட்டம் முழுமையடைந்த பின், செங்கல்பட்டு தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் யாவும், கோடை காலத்திலும் வற்றாத நீர் தேக்கங்களாக மாறும்.

இதனால், தொகுதியில் விவசாயம் செழிப்படையும். கால்நடை வளர்ப்பு அதிகரிக்கும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இத்திட்டம் என் இலக்குகளில் முதன்மையாக உள்ளது. இதை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement