ஓட்டுச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதி; அதிகாரிகள் தீவிரம் 

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சட்டசபை தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் போதுமான வசதிகளை மேம்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி தொகுதியில், 13 வேட்பாளர்களும், வால்பாறையில் 6 பேரும் போட்டியிடுகின்றனர். இரண்டு தொகுதிகளிலும், அ.தி.மு.க., - தி.மு.க., - நாம் தமிழர் - த.வெ.க., கட்சிகள் என நான்கு முனை போட்டியாக உள்ளது.

அரசியல் கட்சியினர் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கொடுக்கும் பணிகள், அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூத் சிலிப் கிடைக்க பெறாதவர்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் பெற்றுக்கொள்ளலாம், என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி தொகுதியில், 274 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு பாதுகாப்பினை உறுதி செய்ய அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வெப் கேமரா அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குடிநீர், கழிப்பிடம், காற்றோட்ட வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் வெயிலில் காத்திருக்காமல் இருக்க, சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ஓட்டுச்சாவடிகளில் இருந்து, 100 மீட்டர், 200 மீட்டர் என எல்லை நிர்ணயித்து வெள்ளை கோடுகள் வரையும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் 200 மீட்டர் எல்லைக்கு அப்பால் மட்டுமே நிற்க வேண்டும்.

ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்கள் 100 மீட்டர் எல்லைக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டும். ஓட்டுப்போடுவதற்கு, பூத் சிலிப்புடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வர வேண்டும். மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஓட்டுப்போட வந்தால், அவர்களுக்கு சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டும், என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement