மருத்துவமனை குடியிருப்பு சேதம் 

புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலைக்கு மாறியுள்ளது.

மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அரசு சுகாதார மற்றும் நலவழி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, படுக்கை வசதிகளுடன் கூடிய ரத்த பரிசோதனை கூடம், கண் சிகிச்சை கூடம், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ளன.

இதனால், காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றிலுள்ள புதுச்சேரி, தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தங்குவதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே குடியிருப்புகள் கட்டப்பட்டன.

ஆனால், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குடியிருப்புகளில் தற்போது யாரும் தங்காததால், பராமரிப்பு இன்றி சேதமடைந்து, விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, சேதமடைந்துள்ள ஊழியர்கள் குடியிருப்புகளை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement