தமிழக சட்டசபை தேர்தல் எதிரொலி: புதுச்சேரியில் 3 நாள் மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் நேற்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.

தமிழக சட்டசபைத் தேர்தல் நாளை 23ம் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் அதிகப்படியான மதுக்கடைகள் அமைந்துள்ளதால், ஓட்டுப்பதிவு நாளில் சட்டம் - ஒழுங்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும் புதுச்சேரி கலால் துறை இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.​

அதன்படி, நேற்று காலை 10 மணி முதல், ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளை 23ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயம், கள், மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் மது பரிமாற உரிமம் பெற்ற உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.​

மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு அனைத்து மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அதேபோல், நேற்று காலை 8 மணிக்கு கடைகள் திறந்தவுடனேயே அடுத்த மூன்று நாட்களுக்குத் தேவையான மதுபானங்கள் வாங்க மதுப்பிரியர்கள் முண்டியடித்தனர்.​

சரியாகக் காலை 10 மணியளவில் கலால் அதிகாரிகள் முன்னிலையில் அனைத்து மதுக்கடைகளும் மூடி 'சீல்' வைக்கப்பட்டன. விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. எல்லையோரப் பகுதிகளில் மதுக் கடத்தலைத் தடுக்கப் போலீசாரும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement