செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

அன்னூர்: பெரியபுத்தூர், செல்வநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

பெரியபுத்தூர், செங்காட்டுத் தோட்டத்தில் உள்ள செல்வநாயகி அம்மன் கோவில் முழுவதும் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில், புதிதாக வேட்டை கருப்பராயன், கன்னிமார், முனீஸ்வரர் மற்றும் வீரமாத்தி அம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருப்பணி நடைபெற்று உள்ளது.

கும்பாபிஷேக விழா நேற்று காலை 7:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையடுத்து மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. பக்தர்கள் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்தனர். காப்பு கட்டப்பட்டு, மாலையில் முதற்கால வேள்வி பூஜை நடந்தது.

இன்று (22ம் தேதி) அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெறுகிறது. காலை 9:30 மணிக்கு செல்வநாயகி அம்மன், செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மகா அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகிறார்.

'பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெறலாம்,' என, காடை குலத்தார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement