பொய்யான குற்றச்சாட்டு கூறி நாடகம்; செல்வப்பெருந்தகை மீது வருமான வரித்துறை போலீசில் புகார்

21


சென்னை: தனது வீட்டில் சோதனை என்ற பெயரில் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக பொய்யான தகவலை கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போலீஸ் மற்றும் தேர்தல் கமிஷனில் வருமான வரித்துறை புகார் தெரிவித்துள்ளது.

வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில், ஹிந்தி பேசும் அதிகாரிகளால், தான் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி காங்., வேட்பாளருமான செல்வப்பெருந்தகை கூறியது தவறானது என வருமான வரித் துறை தரப்பு தகவல் சொல்ல, இவ்விவகாரம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.


இது தொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை என்ற பெயரில் தன்னை சிறைபிடித்துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டார். கீழ்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக நேரில் பேட்டி கொடுத்தார்.


ஆனால், அந்த அறிக்கையும், பேட்டியும் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவரது குற்றச்சாட்டு தவறு. ஆதாரமற்றது. நேற்றோ அல்லது சமீபத்திலோ செல்வப்பெருந்தகை மற்றும் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை. அவர் கூறியபடி கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட எந்த இடத்திலும் சோதனை நடத்தப்படவில்லை.


ஸ்ரீபெரும்புதூரில் சில இடங்களில் கணக்கில் வராத பணம் நடமாட்டம் குறித்து கிடைத்த தகவலின்படி அதிகாரிகள் அந்த இடங்களில் மட்டும் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் செல்வப்பெருந்தகை சம்பந்தப்பட்ட எந்த இடமும் தொடர்புபடுத்தவில்லை. மேலும் நேற்று நடந்த ஆய்வுகளில் எந்த ஆதாரமும் கிடைக்காததால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


பொய்யான மற்றும் தவறான அறிக்கை வெளியிட்ட செல்வப்பெருந்தகை மீது தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அரசின்துறை குறித்து அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதற்காகவும், பொய்யான தகவலை அளித்ததற்காகவும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement