ஒய்ந்தது பிரசாரம் ; இறுதி நாளில் ஆதரவு திரட்டிய வேட்பாளர்கள்

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மாலையுடன் ஓய்ந்த நிலையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர்கள் கூட்டணி கட்சியினருடன் வாகனங்களில் ஊர்வலமாக சென்று இறுதி கட்ட ஆதரவு திரட்டினர்.

மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்காக மார்ச் 30ல் துவங்கிய வேட்பு மனுத்தாக்கல் ஏப். 6 வரை நடந்தது. மனு பரிசீலனை, வாபஸ் பெறுதல் முடிந்து ஏப்.9ல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 185 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 38 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. 32 பேர் தங்களுடைய வேட்பு மனுக்களை ‛வாபஸ்' பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட ஒட்டன்சத்திரம் 14,, பழநி, ஆத்துார், நிலக்கோட்டை, வேடசந்துார் தொகுதிகளில் தலா 15 , திண்டுக்கல்லில் 20, நத்தத்தில் 21 பேர் என 115 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களை கட்டிய பிரசாரம்

7 தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்கைகள் என அனைத்து வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட ஏழு தொகுதிகளிலும் 4 முனை போட்டி நிலவியது. தெருமுனை பிரசாரம், பொதுக் கூட்டம், வேன் பிரசாரம், தொண்டர்களுடன் நடந்து சென்று ஓட்டு சேகரிப்பது என்று வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாளை (ஏப்.23) தேர்தல் நடக்கும் நிலையில் நேற்று மாலை 6:00 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து நேற்று மாலை 7 தொகுதிகளிலும் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement