அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் ; திருச்சி சிவா பிரசாரம்

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சர் சக்கரபாணிக்கு ஓட்டளித்து தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென'' திருச்சி சிவா எம்.பி., பேசினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சக்கரபாணி தங்கச்சியம்மாபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரித்தார். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து தாராபுரம் ரோட்டில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில் திருச்சி சிவா எம்.பி., பேசியதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலினை பற்றி எவ்வளவு சொல்ல முடியுமோ, அவ்வளவு சக்கரபாணியையும் சொல்ல முடியும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள எல்லா ஊர்களிலும் சிமென்ட் சாலைகள் , கல்விக் கூடங்கள், ரேஷன் கடைகள் இருக்கின்றன. அவரது சொந்த முயற்சியால் தமிழ்நாடு அரசியலில் இருந்து பெற்று வந்தது மட்டுமல்ல என்னை போன்ற எம்.பி., க்கள் நிதியிலிருந்தும் திட்டங்களைக் கொண்டு வந்து இந்த தொகுதியை மெருகேற்றியவர். என்னைப் பொறுத்தவரை அவர் வெற்றி பெறுவது நிச்சயமான ஒன்று. ஆனால் உங்களிடம் எதிர்பார்ப்பது தமிழகத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியை வெற்றி பெறச செய்ய வேண்டும் என்றார்.

அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: அமராவதி மற்றும் காவிரி ஆறுகள் இணையும் இடத்திலிருந்து ரூ.5400 கோடி மதிப்பீட்டில் உபரியாக செல்லும் நீரை 5400 கோடியில் கொண்டு வந்து திண்டுக்கல் மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் நிரப்பப்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் முருங்கைக்கு உரிய விலை கிடைப்பது உறுதி செய்ய மார்க்கம்பட்டியில் ரூ.7 கோடி மதிப்பிற்கு முருங்கைப் பெறப்படும் தொழிற்சாலை நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் என்றார்.

Advertisement