கடிகார முள்ளோடு ஒரு 'வாக்கு' யுத்தம்

1

திருப்பூர்: நேரம் மாலை 5:58. படியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாசலில் இருந்த இரும்பு கேட் இன்னும் சில நொடிகளில் மூடப்படத் தயாராக இருந்தது. அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது...

'சார்... ஒரு நிமிஷம் சார்' பஸ் ஸ்டாப்பில் இருந்து குழந்தையைத் துாக்கிக்கொண்டு மூச்சிறைக்க ஓடிவந்தார் பூவிழி.

'குழந்தையைத் தூக்கிட்டு பஸ் ஏறி வர நேரமாகிடுச்சுங்க' என அவர் பதற்றத்துடன் சொல்ல, வாசலில் நின்றிருந்த போலீசார் புன்னகையுடன் அவரை வரவேற்றனர்.

'பதறாதீங்கம்மா... நீங்க வாசலுக்குள்ள வந்துட்டீங்க, இனி நிம்மதியா ஓட்டுப் போடலாம்' என போலீசார் ஆசுவாசப்படுத்த, ஒரு வழியாக பூத்துக்குள் நுழைந்தார். சரியாக 6:00 மணிக்கு தன் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்த பூவிழியிடம் அத்தனை நிம்மதி!

சொந்த ஊரு ஈரோடு பக்கம் கொடுமுடிங்க. அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பார்க்கப் போனேன். இன்னைக்குப் பார்த்து பஸ் வேற சரியா இல்லை. கொடுமுடில இருந்து காங்கயம் வந்து, அங்கிருந்து இன்னொரு பஸ் மாறி இங்க வர்றதுக்குள்ள உயிரே போயிடுச்சு. ஒரு நிமிஷம் தாமதமாயிருந்தாலும் அஞ்சு வருஷக் கடமை வீணாகியிருக்கும். இப்போதான் மனசுக்கு நிறைவா இருக்கு என அந்த ஒரு நிமிடப் போராட்டத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்தார் பூவிழி.

Advertisement