நாடு முழுதும் 3 மாதங்களுக்கு 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, நாடு முழுதும், மூன்று மாதங்களுக்கு, 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே சார்பில், கோடை விடுமுறையையொட்டி, நாடு முழுதும் உள்ள, 18 ரயில்வே மண்டலங்கள் வாயிலாக, 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்கள், ஏப்., 15ல் தொடங்கி ஜூலை 15 வரை இயக்கப்பட உள்ளன. இவற்றில், ஏற்கனவே, 40 முதல் 50 சதவீதம் சிறப்பு ரயில்களை, அந்தந்த மண்டலங்கள் அறிவித்து, சேவையை தொடங்கி உள்ளன.

தெற்கு ரயில்வேயில், ஒப்புதல் வழங்கியுள்ள 72 சிறப்பு ரயில்களில், 38 சிறப்பு ரயில்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, அவை இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது. எஞ்சியுள்ள சிறப்பு ரயில்கள் படிப்ப டியாக இயக்கப்படும்.

இது தவிர, வாய்ப்புள்ள விரைவு ரயில்களில், கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைப்பு, முன்பதிவு இல்லாத பெட்டிகள், 'ஏசி' பெட்டிகளும் இணைக்கப்பட்டு வருகின்றன .

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement