2021 தேர்தலை விட கூடுதலாக ஓட்டளித்தோர் 20 லட்சம் பேர்!

28

சென்னை: தமிழகத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், 2021ம் ஆண்டு நடந்த தேர்தலை விட, 20 லட்சம் பேர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர். வெளியூர் வாக்காளர்களுக்கு வசதியாக, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால், ஓட்டுப்பதிவின் உச்சத்தை எட்ட முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 2025ம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். கடந்த, 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் திருத்தப்படாததால், இறந்த வாக்காளர்கள் மற்றும் நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்தன. பலரது பெயர்கள், இரண்டு தொகுதிகளில் இடம்பெற்று இருந்தன.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News


எஸ்.ஐ.ஆர்.,





இதையடுத்து, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கவும், தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுத்தது.
இதற்காக, தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள், 2025ம் ஆண்டு நவம்பரில் துவங்கின.

வாக்காளர்களின் வீடுகளில் நேரடி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியிடப்பட்டது. எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், வாக்காளர் பட்டியலில் இருந்து, 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

பின், புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கும், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்வதற்கும், கடந்த ஜனவரி 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.


5.73 கோடி பேர்






அதன்பின், இறுதி வாக்காளர் பட்டியலை, பிப்ரவரியில் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதன் பின்னரும் கூட, வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு, கடந்த 6ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்ற பின், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தற்போதைய வாக்காளர் பட்டியலில், 2.80 கோடி ஆண்கள், 2.93 கோடி பெண்கள், 7,728 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5.73 கோடி பேர் இடம்பெற்றனர்.

தமிழகம் முழுதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேற்று, ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இதில், தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., - நாம் தமிழர் கட்சி என, நான்கு முனை போட்டி ஏற்பட்டது.

தி.மு.க., கூட்டணியில் 22 கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில் 12 கட்சிகளும் இடம்பெற்றன. த.வெ.க., மற்றும் நாம் தமிழர் கட்சி, தனித்து போட்டியிட்டுள்ளன.

முந்தைய தேர்தல்களை விட, நேற்று நடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டளிப்பதற்கு வாக்காளர்கள் ஆர்வம் காட்டினர். இதற்காக, வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.

சென்னையில் பணிபுரிபவர்கள், கல்லுாரி மாணவர்கள் என, பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஓட்டுச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, காலை 7:00 மணி முதல் ஓட்டளித்தனர். மாலை 6:00 மணிக்கு முன் ஓட்டளிக்க ஓட்டுச்சாவடிக்கு வந்தவர்களுக்கு, 'டோக்கன்' வழங்கப்பட்டு, ஓட்டுப் போட அனுமதிக்கப்பட்டனர்.

அதன் காரணமாக, பல தொகுதிகளில், இரவு 7:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மொத்தம் இருந்த, 6.29 கோடி வாக்காளர்களில், 4.63 கோடி பேர், அதாவது 73.63 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.

எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு பின், நேற்று நடந்த தேர்தலில், மொத்தமாக 85.03 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.83 கோடி பேர் ஓட்டளித்து, தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். கடந்த தேர்தலை விட, கூடுதலாக 20 லட்சம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.

தொழில் மற்றும் அலுவல் காரணமாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், வெளியூர்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கல்வி காரணமாக ஏராளமான கல்லுாரி மாணவர்களும், சென்னை போன்ற நகரங்களில் தங்கியுள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க வசதியாக, சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

அதனால், அவர்களால் ஓட்டுப் போட முடியவில்லை. தாமதமாக புறப்பட்ட பலரும், ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரே, சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர். அவர்களும் ஓட்டுப் போட்டிருந்தால், ஓட்டுப்பதிவில் தமிழகம் புதிய உச்சத்தை தொட்டிருக்கும். கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்ததற்கு, நீண்ட தொலைவு பஸ்கள் இயக்கப்பட்டதில் நடந்த குளறுபடியே காரணம் என, பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகம் முழுதும் ஓட்டுப்பதிவு அமைதியாக முடிந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி ஏஜன்டுகள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'சீல்' வைக்கப்பட்டன. அந்தந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு, அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

மாநிலத்தில் பதிவான ஓட்டுக்கள், 62 மையங்களில், மே 4ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


@block_B@ அலைமோதியது கூட்டம் ஆர்வமா, அலையா?

தமிழகத்தில், 75,064 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுச்சாவடிகளில் இதுவரை பார்க்காத வகையில், பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் பலரும், காலை முதல் காத்திருந்து ஓட்டளித்தனர். பல மாவட்டங்களில் பகல் நேர வெயில் சுட்டெரித்தது. அதை பொருட்படுத்தாமல், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிக்கு வந்திருந்தனர். இது வாக்காளர்களின் மவுன புரட்சியா; கடும் போட்டியே காரணமா; இளைஞர்கள் ஆர்வமா; மாற்றத்திற்கான அறிகுறியா; ஆதரவு அலையா என, அரசியல் கட்சிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்காளர்கள், தங்களது ஐந்தாண்டு கால திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அமோக ஆதரவளித்துள்ளதாக, தி.மு.க.,வினர் பெருமிதம் கொள்கின்றனர். ஐந்து ஆண்டுகால அரசின் அவலத்திற்கு எதிராக, மக்கள் திரண்டு வந்து ஓட்டளித்துள்ளதாக, அ.தி.மு.க.,வினர் உறுதியாக கூறுகின்றனர். இளைஞர்கள், பெண்கள் தன்னெழுச்சியாக ஓட்டளித்துள்ளது, ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என, த.வெ.க.,வினர் நம்புகின்றனர்.block_B


தேர்தல் கமிஷன் 'சல்யூட்'

அதிக ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதால், தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைவணங்குவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.நேற்று அவர் அளித்த பேட்டியில், ''தமிழகம், மேற்கு வங்கத்தில் நடந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற ஒவ்வொரு வாக்காளருக்கும், இந்திய தேர்தல் கமிஷன் தலை வணங்குகிறது. நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழகம்,மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன,'' என, கூறியுள்ளார்.

Advertisement