மாணவ, மாணவியர் கல்விக்கடன் தள்ளுபடி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரசேகர் பிரசாரம்


திருச்செங்கோடு, ''மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்,'' என, தேசிய ஜனநாயக கூட்டணியின், அ.தி.மு.க., வேட்பாளர் வட்டூர் எஸ்.ஆர்.எம்.டி.சேகர் என்ற ஆர்.சந்திரசேகர், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
சுத்திகரித்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். சாலை வசதி, மின்விளக்கு வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவேன். மக்களின் சுமையை குறைக்க, ஒவ்வொரு குடும்பத்துக்கும், 10,000 ரூபாய், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். குடும்பம் ஒன்றுக்கு, மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். முதியோர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம், 2,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
நகர பகுதியில் நடைபாதை சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். கழிப்பிடம் இல்லாத பகுதிகளில், நவீன சுகாதாரமான கழிப்பிட வசதி செய்து தரப்படும். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம், ஒருகிலோ பருப்பு மற்றும் ஒருலிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். நகர பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
சிறுபான்மையின மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, வட்டி சலுகையுடன் கடன் வசதி வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தவருக்கு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்படும். ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் வழங்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். வங்கிகளில் பெற்ற மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும். நவீன வசதிகளுடன் கூடிய நகராட்சி திருமண மண்டபம் அமைக்கப்படும்.
வீட்டுமனை இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும். விசைத்தறி நெசவாளர்களுக்கு, 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இதுபோன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் கிடைக்க, ஏழை, எளிய கிராம மக்கள் வாழ்க்கையில் மேம்பட எம்.ஜி.ஆரின் சின்னமான, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement