ஈரான் உடனான போர் நிறுத்தத்தை நீட்டித்தார் டிரம்ப்

8


வாஷிங்டன்: ஈரான் உடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


கடந்த பிப்.,28 ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக தாக்குதல் நடத்தின. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்க துவங்கியது. ஹார்மூஸ் ஜலசந்தியையும் மூடியது. இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. சர்வதேச நாடுளின் அழுத்தம் காரணமாக, ஈரானுடன் தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இது இன்றுடன் முடிவுக்கு வருகிறது.


இதற்கிடையே பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன், சமீபத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே முதல் கட்ட பேச்சு நடந்தது.முதலில் இரு தரப்பும், பாகிஸ்தானுடன் பேசின. அதில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஈரானும் நேரடியாக பேசின. தொடர்ந்து, 21 மணி நேரம் நடந்த பேச்சு, உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.

பேச்சுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்தது.அந்தப் பகுதியில் இருந்து அமெரிக்க படைகள் முழுதும் விலக்கிக் கொள்ள ஈரான் வலியுறுத்தியது. இது ஏற்கப்படாததால், ஜலசந்தியை ஈரான் முழுதும் முடக்கியது. இதன் காரணமாக அமைதி பேச்சுவார்த்தை தடைபட்டுள்ளது.இதனால், அமைதி பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடக்குமா அல்லது மீண்டும் தாக்குதல் துவங்குமா என்ற பரபரப்பு சர்வதேச நாடுகள் மத்தியில் எழுந்தது.


இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் அரசு பிளவுபட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையாலும், அமைதி ஒப்பந்தம் சார்ந்து ஒருங்கிணைந்த முன்மொழிவை ஈரான் முன்வைக்கும்வரையில் இந்த போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுகிறது. ஈரான் கடற்படை முற்றுகையை தொடரவும், மற்ற நிலைகளிலும் தயார்நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். ஈ ரான் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, அது குறித்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும் வரை, அது எத்தகைய முடிவாக இருந்தாலும் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும் உள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒத்திவைப்பு
இதற்கு இடையே, அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்லவிருந்த துணை அதிபர் வான்ஸின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement