ஓட்டு எண்ணும் நாளில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் நாளில் சட்டம் - ஓழுங்கை பாதிக்காத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. தொடர்ந்து, ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், லாஸ்பேட்டை மகளிர் பொறியியல் கல்லுாரி, தாகூர் கலைக் கல்லுாரி, மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரி ஆகிய 3 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், காரைக்கால் மாவட்டத்தில் அண்ணா கலை கல்லுாரி, மாகேவில் நேரு அரசு உயர்நிலைப் பள்ளி, ஏனாமில் அரசு கலைக் கல்லுாரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஓட்டு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் தொடர்பான போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, போலீஸ் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், திவ்யா, எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பேசுகையில், 'புதுச்சேரியில் ஓட்டு எண்ணும் நாளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரியும் நபர்களை பிடித்து விசாரணை நடத்த வேண்டும். பதட்டமான பகுதிகளில் கூடுதலாக போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.

Advertisement