தேர்தலையொட்டி நடந்த சோதனை :மது கடத்தியதாக 162 வழக்குகள் பதிவு

வானுார்: சட்டசபை தேர்தல் நேரத்தில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதாக விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் 162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோதமாக பணப்புழக்கம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்கள் கடத்தலைத் தடுக்க மாவட்டம் முழுதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட எல்லைகளில் மதுவிலக்கு அமல்பிரிவு சார்பில், பெரிய முதலியார்சாவடி, பட்டானுார், கிளியனுார், அனிச்சங்குப்பம், பெரும்பாக்கம், கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, பனையபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

கடந்த 1ம் தேதி முதல் தேர்தல் தினமான 23ம் தேதி வரை பல்வேறு இடங்களில் புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவில் மட்டும் புதுச்சேரி சாராயம் கடத்தியதாக ஒரு வழக்கு, மதுபாட்டில்கள் கடத்தியதாக 34, டாஸ்மாக் மது கடத்தியதாக 14, கள் கடத்தியதாக 29 என 78 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும், 415 லிட்டர் மது மற்றும் 19 இரு சக்கர வாகனங்களும், 2 நான்கு சக்கர வாகனங்களையும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதே போன்று மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 காவல் நிலையங்களில் 84 மது கடத்தல் வழக்குகளும், 479 லிட்டர் மது பாட்டில்கள் மற்றும் 11 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement