புதுச்சேரி கடற்கரை துாய்மை பணி; சமூக கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில், புதுச்சேரி பல்கலைக் கழக சமூகக் கல்லுாரி மற்றும் பிளான்ட் அறக்கட்டளை சார்பில், கடற்கரை துாய்மைப்படுத்தும் பணி நேற்று நடந்தது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், புதுச்சேரி கடற்கரையில் (ராக் பீச்சில்) நடந்த நிகழ்ச்சிக்கு, சமூகக் கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி, துாய்மைப் பணியைத் துவக்கி வைத்தார். மேலாண்மைத் துறைத் தலைவர் பாண்டு, உடற்கல்வித் துறைத் தலைவர் ஜகதீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பிளான்ட் அறக்கட்டளை நிர்வாகிகள் உதயகுமார், ஜெயபாரதி, சரவணன் மற்றும் பேராசிரியர்கள் கில்பர்ட், செந்தில்குமார், சமூக இணைப்பு உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இதில் பி.காம்., காட்சியியல் தொடர்பியல் மற்றும் உடற்கல்வித் துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். கடற்கரை மணற்பரப்பில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள் மற்றும் இதர கழிவுகளை மாணவர்கள் சேகரித்து அகற்றினர்.

பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என வலியுறுத்திய ஒருங்கிணைப்பாளர்கள், துாய்மை பணியின் நிறைவில் மாணவர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

Advertisement