இயந்திரங்கள் பழுது  ஓட்டுப்பதிவு தாமதம் 

கடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதி சாத்தங்குப்பம் ஓட்டுச்சாவடி மையத்தில் மின்னணு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் வாக்காளர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

குறிஞ்சிப்பாடி தொதிக்குட்பட்ட சாத்தங்குப்பம் குளுனி மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 156ம் எண் ஓட்டுச்சாவடி மையத்தில் நேற்று மதியம் 1:00 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி மையத்தில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 2 மணி நேரத்திற்கு பிறகு மிண்ணனு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது நீக்கப்பட்டு, வாக்காளர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது

வாக்காளர்கள் அவதி

பெண்ணாடம், ஏப். 24-

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக காலை 7:00 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளிக்க துவங்கினர்.

அதன்படி, கடலுார் மாவட்டம், திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம் ஓட்டுச்சாவடி மையத்தில் துவங்கிய சில நேரத்தில் ஓட்டு இயந்திரம் திடீரென பழுதானது.

தொடர்ந்து, 8:00 மணியளவில் புதிதாக ஓட்டு இயந்திரம் பொருத்தி, மீண்டும் ஓட்டுப்பதிவு துவங்கியது.

சிதம்பரம்

சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெரு, சிதம்பரம் அடுத்துள்ள சிவபுரி, தச்சக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் ஓட்டுப்பதிவு நடந்து கொண்டிருக்கும் போது, திடீரென இயந்திரங்கள், பழுதானது.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியாளர்களை வர வைத்து, பழுதை சரி செய்தனர். இதனால், 30 நிமிடங்கள் வரை ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியில் 5 பூத்துகள் இருந்தன. நேற்று காலை 7:00 மணிக்கே பூத்தில் 40 க்கும் மேற்பட்டவர்கள் ஓட்டு போட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் அங்கு இயந்திரம் வேலை செய்யவில்லை.

அதை சரி செய்ய ஊழியர்கள் முயற்சி செய்தும் பலனில்லை. நீண்ட நேரம் காத்திருந்த வாக்காளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.இதனால் வேறு வழியின்றி வேறு இயந்திரம் எடுத்து வந்து ஒரு மணி நேரம் காலதாமதமாக 8:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கியது. இதேபோல் முள்ளிகிராம்பட்டு,மேல்பட்டாம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இயந்திரம் பழுதானது. சிறிது நேரத்தில் சரி செய்து மீண்டும் அமைதியாக ஓட்டு பதிவு நடந்தது.

Advertisement