ஓட்டுப்பதிவு அதிகரிப்பு ஏன்?: மக்களின் ஆர்வமா? எஸ்.ஐ.ஆர் காரணமா?

33

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு ஓட்டு சதவீதம் அதிகரித்ததற்கு மக்களின் ஆர்வம் காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர் பணிகள் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



தமிழக சட்டசபைக்கான தேர்தல் நேற்று (ஏப்.,23) 234 தொகுதிகளிலும் நடந்து முடிந்தது. இதில், இதுவரை இல்லாத அளவாக முதன்முறையாக எண்பது சதவீதத்தை தாண்டி, 85.03 சதவீத ஓட்டுகள் பதிவாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


இது திமுக அரசின் செயல்பாடுகள் தொடர, மக்கள் விரும்பியே ஓட்டளித்ததாக திமுக.,வினரும், ஆளும்கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டதால் ஆட்சி மாற்றத்தை விரும்பி மக்கள் ஓட்டளித்ததாக அதிமுக.,வினரும், புதிய கட்சிக்கு வாய்ப்பளிக்கும் விதமாக விஜய் அலை வீசியதால் தான் அதிகளவு சதவீதம் கூடியுள்ளதாக த.வெ.க.,வினரும் என ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்லி வருகின்றனர்.


உண்மையில் மக்களின் ஆர்வம் தான் ஓட்டு சதவீத அதிகரிப்புக்கு காரணமா அல்லது எஸ்.ஐ.ஆர் திருத்தம் காரணமா என ஆராயப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மொத்தம் இருந்த, 6.29 கோடி வாக்காளர்களில், 4.63 கோடி பேர், அதாவது 73.63 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர்.


இறந்தவர்கள், போலி முகவரி, ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகள், ஊர் மாறியவர்கள், மாநிலம் விட்டு சென்றவர்கள் என அனைத்தும் நீக்கப்பட்டன. இப்பணிகளுக்கு பின், மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், 18 வயதான புதிய வாக்காளர்கள் மட்டும் 14,59,039 பேர். இந்த எண்ணிக்கை அடிப்படையில் நேற்று நடந்த தேர்தலில், சராசரியாக 85.03 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதாவது, மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.85 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். அதாவது கடந்த தேர்தலை விட, கூடுதலாக 22 லட்சம் பேர் ஓட்டுப் போட்டுள்ளனர்.

புள்ளிவிவரம் சொல்வது என்ன





2001 முதல் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் ஓட்டு சதவீதம் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும், பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. அதாவது, 2001ல் 2.80 கோடி ஓட்டுகள் பதிவாகி இருந்தன.


2006ல் 3.29 கோடி (49 லட்சம் அதிகம்), 2011ல் 3.69 கோடி (40 லட்சம் அதிகம்), 2016ல் 4.32 கோடி (63 லட்சம் அதிகம்), 2021ல் 4.63 கோடி (31 லட்சம் அதிகம்), 2026ல் 4.85 கோடி (22 லட்சம் அதிகம்) வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்.


அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தது 30 முதல் 40 லட்சம் ஓட்டுகள் அதிகரித்து வந்த நிலையில், இந்த தேர்தலில் வெறும் 22 லட்சம் வாக்காளர்களே அதிகம் ஓட்டளித்துள்ளனர். அதிலும், முதல் தலைமுறை வாக்காளர்களே 14.59 லட்சம் பேர்.


இந்த புள்ளிவிவரங்களின் படி பார்த்தால், எஸ்.ஐ.ஆர் பணி காரணமாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததே சதவீதம் அதிகமாக காரணம். அதே நேரம், மற்ற தேர்தல்களை ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் அதிகரிக்கும் ஓட்டுகளின் எண்ணிக்கை சற்றே குறைவு என்றே சொல்லலாம்.

Advertisement