பயணியர் நிழற்குடை இன்றி மக்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு பாண்டிகண்மாய் முக்கு ரோட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேல் பயணிகள் நிழற்குடை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார்--பரமக்குடி ரோடு பாண்டி கண்மாய் முக்கு ரோட்டில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. பின் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலைக்கு மாறியது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு நிழற்குடை கட்டடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

தற்போது வரை நிழற்குடை கட்டடம் கட்டப்படாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் வெண்ணீர் வாய்க்கால், கிருஷ்ணாபுரம், வெங்கலக்குறிச்சி உட்பட அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வெயில், மழைக்காலங்களில் சாலையோரத்தில் உள்ள மரத்தடியில் காத்திருந்து செல்கின்றனர். சில நேரங்களில் மக்கள் நிற்பது தெரியாமல் பஸ் நிற்காமல் செல்கிறது.

எனவே பாண்டி கண்மாய் முக்கு ரோட்டில் புதிய பயணியர் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement