அ.தி.மு.க., வேட்பாளரிடம்  நலம் விசாரித்த கணேசன்

விருத்தாசலம்: ஓட்டுஎண்ணும் மையத்திற்கு சீல் வைத்தபோது, அ.தி.மு.க., வேட்பாளருக்கு கைகுலுக்கி தி.மு.க., வேட்பாளர் கணேசன் நலம் விசாரித்தனர்.

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுஎண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்ததும், இரு தொகுதிகளில் இருந்தும் இரவோடு இரவாக சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

அவை, ஸ்டிராங் ரூம் எனப்படும் பாதுகாப்பறையில் அடுக்கி வைக்கப்பட்டு, வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் நேற்று சீல் வைக்கப்பட்டது.

திட்டக்குடி தொகுதிக்கான ஸ்டிராங் ரூமில் பொது பார்வையாளர் குகன் பூனம் தபஸ் குமார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்கள் அடங்கிய மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

முன்னதாக, தி.மு.க., வேட்பாளரான அமைச்சர் கணேசன், அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறனுக்கு கைகுலுக்கி நலமாக இருக்கிறீர்களா என விசாரித்தார்.

விருத்தாசலம் தொகுதி ஸ்டிராங் ரூமுக்கு நேற்று காலை 8:00 மணியளவில் சீல் வைக்கப்பட்டது. தே.மு.தி.க., முகவர் சிவக்கொழுந்து, பா.ம.க., முகவர் செல்வராஜ் தவிர்த்து, மற்ற கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் என யாருமே இல்லாதது குறிப்பிடத்தக்கது.

Advertisement